பெரியவர்கள் உறங்கும்போது மட்டுமே கனவு காண்பவர்கள்.ஆனால் குழந்தைகள் தங்களுடைய குழந்தைப் பருவத்தையே கனவாகக் காண்பவர்கள்.படைப்பூக்கம் மிக்க அந்தக்கனவுகளை மட்டும் நம்மால் சரியாக மொழிபெயர்க்க முடியுமானால்,அவற்றைச் செயல்படுத்த முடியுமானால்,இந்த உலகமே வண்ணமயமான கனவாகிவிடும்.குழந்தைகளின் உலகில் மாயஜாலங்களே நிறைந்திருக்கின்றன.குழந்தைகள் ஒரு தீப்பெட்டியை பஸ்ஸாக மாற்றிவிடும் வல்லமை கொண்டவர்கள்.நான்கு தீப்பெட்டிகள் சேர்ந்தால் அதுவே ரயிலாக மாறிவிடும்.பார்க்கிற அனைத்தையும் எந்தத் தயக்கமும் இன்றி போலச்செய்து பார்க்கிறவர்கள்.பெற்றோர்களும் கல்விமுறையும் எவ்வளவுதான் அவர்களை வசக்கினாலும்,மூளைச்சலவை செய்தாலும் தங்கள் குழந்தைமையை,படைப்பூக்கத்தைத் துளிர் விடச்செய்யும் மந்திரம் தெரிந்தவர்கள்.