சாதி, மதம், பொருளாதார நிலை, அரசியல் சார்பு அனைத்தையும் கடந்து தனி மாநிலத்துக்காக நீண்ட காலமாக ஆயிரக்கணக்கான தெலுங்கானா
மக்கள் போராடியிருக்கிறார்கள். ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்திடம் இனியும் இணைக்கமாக இருக்கமுடியாது என்னும் சூழலில் இந்த முடிவை அவர்கள்
எடுத்திருந்தார்கள். ஆனால் அந்தக் கோரிக்கையை வென்றடைவது அத்தனைச் சுலபமாக இல்லை. தங்கள் உடல், உயிர், உடைமை உள்ளிட்ட
அனைத்தையும் இழந்து தொடர்ச்சியாகவும் துணிச்சலாகவும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக தெலுங்கானா மக்கள் போராடவேண்டியிருந்தது.
அதற்குப் பிறகே அவர்கள் கனவு நிறைவேறியது.
ஆந்திரப் பிரதேசத்தைத் தாண்டி இந்திய அரசியல் வரலாற்றிலேயே மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்வை எப்படிப் புரிந்துகொள்வது?
தெலுங்கானா மக்களின் தேவைகள் அனைத்தும் இனி தீர்ந்துவிடுமா? அவர்களுடைய சிக்கல்கள் முடிவுக்கு வந்துவிடுமா? அரசியல் தளத்திலும்
சமூகத்தளத்திலும் இது எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்? இவற்றையெல்லாம்விட முக்கியமாக, தனித் தெலங்கானா முதலில் அவசியம்தானா?
இதனால் ஆதாயம் அடையப் போகிறவர்கள் யார்?
ஜனனி ரமேஷின் இந்தப் புத்தகம் தெலங்கானா கோரிக்கை உதயமான தினம் தொடங்கி இன்று வரையிலான நிகழ்வுகளை அவற்றின்
பின்னணியோடு எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. சமகால அரசியமீது ஆர்வம் உள்ள அனைவருக்கும் இது ஓர் இன்றியமையாத நூல்.