“நமது பரத கண்டத்திலே, இந்தக் காலத்திலே மேலைத் தேசங்களில் பிரசித்திபெற்று விளங்கும் பிராகிருத சாத்திரக்கொள்கைகள் நுழைந்து, எமக்குப் பிதிரார்ச்சிதமாகக் கிடைத்த தெய்வக் கொள்கையைப் பெரிதுந் தளர்புறுத்துவனவாயின. ஏறக்குறைய 45, 50 வருடங்களுக்கு முன்னே சென்னை இராசதானியிலே `தத்துவ விசாரிணி’ `தத்துவ விவேசினி’ என்னும் இரண்டு தமிழ்ப் பத்திரிக்கைகள் தோன்றி, இங்கிலாந்து தேசத்தில் இருந்துகொண்டு நாத்திகப் பிரசங்கஞ் செய்துகொண்டுவந்த பிறாட்லா (Bradlaugh 1833-1891) என்பாருடைய கொள்கையைப் பிரதிபாதித்தலிற் பெரு முயற்சி செய்வனவாயின. அந்தப் பத்திரிக்கைகளால் நமது தேசத்துக்கு உண்டாகிய கேட்டைக் கண்டு சகிக்கலாற்றாது, அவற்றின் ஆபாசங்களையெல்லாம், அந்தக் காலத்திலே யாழ்ப்பாணத்திலே நடைபெற்றுவந்த `உதயபானு’ என்னும் பத்திரிக்கையிலே எடுத்துக்காட்டிக் கண்டித்து வந்தோம். அங்ஙனம் நாம் அப்பத்திரிக்கையில் எழுதிய வியாசங்களே பின்னர் `ஈச்சுர நிச்சயம்’ என்னும் பெயரோடு புத்தக வடிவமாக எம்மால் அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டன. அந்நூல் வெளிப்பட்டபின், திருவருள் காரணமாக நாத்திகப் பிரசங்கமும் ஒருவாறு ஒழிந்துவிட்டதெனலாம்.” (பிரபஞ்ச விசாரம். ஈச்சுவர நிச்சயத்தின் இரண்டாம் பாகம், ச. சபாரத்தின முதலியார். 1918 முகவுரை)
“பௌதிகவாத சேட்டராகிய பிறாட்லா (Bradlaugh) முதலாயினாரது துர்வாதங்களை வாசித்துணர்ந்த நம்மவரிற் பலர் அக்கொள்கையின் கண்ணே பேரபிமானமுற்று, அதனை எடுத்துப் பத்திரிக்கைகள் வாயிலாகப் பிரதிபாதிக்கத் தொடங்கிக் கொண்டார்கள். இன்றைக்குப் பல வருடங்கட்கு முன்னே, சென்னைபுரியிற் பிரசுரிக்கப்பட்டு வந்த`தத்துவ விசாரிணி’, `தத்துவ விவேசினி’ என்னும் பத்திரிக்கைகளிலே இப்பௌதிகவாதம் பெரிதும் பிரதிபாதிக்கப்பட்டு வந்தமை காரணமாக, நாம் அந்தக் காலத்திற்றானே, அக்கொள்கைகளையும் அவற்றுக்கு ஆதாரமாயுள்ள உலோகாயத முதலிய நிரீச்சுவரக் கொள்கைகளையும் கண்டித்து, யாழ்ப்பாணம் `உதயபானு’ பத்திரிக்கை வாயிலாகப் பற்பல கடிதங்களை எழுதிப் பிரசுரித்து வந்தோம் ...” (ஈச்சுவர நிச்சயம், ச. சபாரத்தின முதலியார், முதல் பதிப்பு 1895, இரண்டாம் பதிப்பு1954. முதல் பதிப்பில் ஆசிரியரின் முகவுரை.)
யாழ்ப்பாணத்துக் கொக்குவில் குகதாசர் என அழைக்கப்பெறும் சைவப்புலவர் ச. சபாரத்தின முதலியார் எழுதிய இரண்டு நூல்களின் முகவுரையில் காணப்படும் செய்திகளை மேலே கொடுத்துள்ளேன். இதன்மூலம் தமிழகத்தில் நாத்திகம் தொடர்பான இயக்கம் செயல்பட்டதை அறிகிறோம். அவ்வியக்கம் தொடர்பான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் செயல்பட்ட முதல் நாத்திக இயக்கத்தை அறிமுகப்படுத்துவதை இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாத்திகக் கோட்பாடு என்பது கடவுள் இருப்பை மறுப்பது. கௌதம புத்தர் (கிமு 563-483?) காலம் தொடங்கிப் பெரியார் ஈ.வெ.ரா. காலம் வரை (1879-1973) இக்கோட்பாடு கடவுள் இருப்பு தொடர்பான உரையாடல்களை முன்வைப்பதை நாம் அறிவோம். இக்கோட்பாட்டில் பல அணுகுமுறைகள் உள்ளன. பௌத்தம் போன்ற சமயங்கள் இதனை வரையறை செய்வதும், 18ஆம் நூற்றாண்டு முதல் உருப்பெற்று வளர்ந்து வரும் புத்தொளி சார்ந்த தத்துவக் கோட்பாடுகள் நாத்திகத்தை வரையறை செய்வதும் அடிப்படையில் வேறுபாடுகளைக் கொண்டது. தமிழ்ச் சூழலில் பௌத்தம் போன்ற சமயங்கள் முன்னெடுத்த நாத்திக மரபு குறித்த உரையாடல்கள் இங்கு நமது நோக்கமன்று. ஐரோப்பியப் புத்தொளி மூலம் உருவான நாத்திக மரபு தமிழ்ச்சூழலில் எவ்விதம் உள்வாங்கப்பட்டது என்பது தொடர்பான உரையாடலே இங்கு நமது நோக்கம்.
The Thinker