சில படைப்புகளை வார்த்தைகளால் விளக்கவோ விவரிக்கவோ முடியாது! அதற்கு மிகச் சிறந்த உதாரணம் அமரர் சில்பியின் அமரத்துவம் பெற்ற ஓவியங்கள். ஓவியம் வரையும் திறனை இறைவன் பலருக்கு அளித்துள்ளான் எனினும் தன்னையே (இறைவன்) வரையும் திறனை மிகச் சிலருக்கு மட்டுமே அவன் அருளியுள்ளான்! அதில் முதன்மையானவர் ஓவியர் சில்பி என்றால் அது மிகையாகாது. "64-ஆவது நாயன்மார்' என்று ஓவியர் சில்பியை இப் புத்தகத்தின் முன்னுரையில் ஓவிய மேதை கோபுலு வருணித்துள்ளது மிகப் பொருத்தம். மதுரை தொடங்கி ஹளேபீடு வரை 39 ஊர்களில் உள்ள கோயில்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களை ஓவியங்களாக வடித்திருக்கிறார் ஓவியர் சில்பி. இத் தொகுப்புகளை வாங்கி பக்கம் பக்கமாக சில்பி வடித்துள்ள சிற்பங்களை (ஓவியங்கள்!) அதன் பின்னணியில் உள்ள விளக்கங்களோடு படித்துப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கும் வண்ணம் நம்முள் பக்தியும் கலை ஆர்வமும் ஊடுருவுகிறது! இத்தகைய புத்தகத்தை வாங்குவதற்கு சிபாரிசு வேண்டுமா என்ன?!